கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ’’தமிழ்நாடு முழுவதும் கடைவீதிகளில் அலைமோதும் மக்கள் கூட்டத்தைப் பார்க்கும்போது கரோனா பாதிப்பு இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சமும் கவலையும் ஏற்படுகிறது.
நோயின் பாதிப்பு அதிகமாகிறது என்று சொல்லிவிட்டு, எல்லாக் கடைகளையும் ஒன்றரை நாள் முழுமையாகத் திறக்க எப்படி அனுமதித்தார்கள்? சிறப்பு பேருந்துகளை இயக்கும் அவசர முடிவை எடுத்தது ஏன்?
நகரங்களில் இருக்கும் அதிக பெருந்தொற்று பாதிப்பு எல்லா ஊர்களுக்கும் பரவி விடாதா? ஏற்கனவே காலை 10 மணி வரை கடைகள் திறந்து இருந்த நிலையில், அதன் பிறகு அவசியமின்றி வெளியில் வந்தவர்களை முழுமையாகக் கட்டுப்படுத்தாமல், கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சரியான திட்டமிடுதல் இன்றி இப்படி குழப்புவது ஏன்?
கடந்த ஆட்சியாளர்கள் செய்த அதே தவறுகளைத் தற்போதைய தமிழ்நாடு அரசும் செய்வது எங்கே போய் முடியும் என்று தெரியவில்லை. இதன் பிறகாவது ஆட்சியாளர்கள் பொறுப்போடு நடந்து கொள்வார்களா? மக்களும் மிகுந்த கவனத்தோடு நடந்துகொண்டு தாங்களும் பாதிக்கப்படாமல், மற்றவர்களும் பாதிப்படைவதற்கு காரணமாகிவிடாமல் இருந்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’’ என, அதில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய இலவச அவசர ஊர்தி சேவை!