சென்னை: முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இதையடுத்து கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்து, பின் அவரை கட்சியிலிருந்து நீக்கினர்.
மேலும் உள்கட்சி தேர்தலும் நடத்தப்படவில்லை. அதற்கு மாறாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டு, இரட்டை தலைமை அடிப்படையில் கட்சி நடத்தப்பட்டுவருகிறது.
எனவே, இதற்கு தடை விதித்து, உள்கட்சி தேர்தலை நடத்தி பொதுச்செயலாளர் என்ற அங்கீகாரத்தில் ஒருவரை தேர்தெடுக்க வேண்டும் எனவும், இந்த நடைமுறையை அதிமுக பின்பற்றவில்லை என்றால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் திண்டுக்கல்லை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் புகார் அளித்திருந்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தும் அதிமுகவில் உள்கட்சி தேர்தல் நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இது குறித்து இந்திய தேர்தல் ஆணையம், “இந்த வழக்கில், தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் ஒருங்கிணைப்பது சிரமமாக இருக்கிறது. எனவே, டிசம்பர் வரை கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அதிமுக விளக்கம் அளித்திருக்கிறது” என்று நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (ஜூலை 22) ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இக் கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இக்கூட்டத்தில், சென்னையில் உள்ள மாவட்ட செயலாளர்கள், ஜெயக்குமார், ஆதிராஜாராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!