சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் கட்டுமானத் தொழிலையும் விட்டு வைக்கவில்லை. சென்னையை பொறுத்தவரை கட்டுமானத்தொழில் என்பது மிகவும் முக்கியான தொழிலாக உள்ளது. இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் லட்சக்கணக்கானோர் பணியாற்றி வந்த நிலையில், நகரில் ஏற்பட்ட கடும் தண்ணீர் பற்றாக்குறையால் கடந்த சில மாதங்களாகவே கட்டுமானப் பணிகளில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது.
தற்போது ஈ.சி.ஆர் சாலை, கோயம்பேடு உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வந்த கட்டுமானப்பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. இதனால், கட்டிடத்தொழிலை நம்பியிருந்த பலர் வேலை இழந்து அவர்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது.
இதுகுறித்து தமிழக கட்டுமான தொழிலாளர் அமைப்பின் தலைவர் ராமபிரபு கூறுகையில், “இரண்டாயிரம் ரூபாய் முதல் ஐந்தாயிரம் ரூபாய் வரையிலான கட்டுமானத் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளது. அயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த தண்ணீர் இப்போது ஏழாயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. அப்படியே பணம் கொடுத்தாலும் கிடைப்பதில்லை. இந்த அளவிற்கு தண்ணீர் வாங்கி கட்டுமானப் பணிகளை செய்தால் எங்கள் பட்ஜெட்டுக்குள் வராது என்பதால் பணிகளை கைவிட்டுள்ளோம்.
இதே நிலைதான் சொந்த விடு கட்டலாம் என நினைப்பவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. கட்டுமானத் தொழில் சார்ந்துள்ள எலக்ட்ரிக்கல், பிளம்பிங், பெயிண்டிங் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் வேலையிழந்து தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளனர்.
இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு இனி வரும் காலங்களில் மழை நீரை சேகரிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் அரசு எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
குடிப்பதற்கும், அடிப்படை தேவைகளுக்குமே தண்ணீர் இல்லாமல் உள்ள நிலையில், கட்டுமானத் தொழில் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது ஆச்சரியம் இல்லை என்றாலும், அதனை நம்பி வாழ்க்கை நடத்திவரும் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் நிலையையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து இனி வரும் காலங்களில் தண்ணீரை சேமிக்க அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.