சென்னை: மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணிமண்டபத்தில் தியாகிகளின் திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் மூத்த அமைச்சர்கள் இன்று (ஜன.25) மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மணிமண்டபத்திற்கு சென்ற முதலமைச்சர் அங்கு மாவட்ட வாரியாக வைக்கப்பட்டிருந்த மொழிப்போராட்ட தியாகிகளின் திருவுருவப் படங்களை பார்வையிட்டார். பிறகு மணிமண்டபத்தினுள் வைக்கப்பட்டிருந்த நடராசன், தாளமுத்து, கீழப்பழுவூர் சின்னசாமி உள்ளிட்டோரின் திருவுருவப் படங்களுக்கு அமைச்சர்களுடன் இணைந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
முன்னதாக இன்று காலை தனது இல்லத்திலிருந்து புறப்பட்ட முதலமைச்சர் திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், மு.பெ. சாமிநாதன், மா. சுப்பிரமணியன் , கே.என்.நேரு, எ.வ. வேலு , ரகுபதி தங்கம் தென்னரசு, சி.வி கணேசன், சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: ஹைதராபாத் கூட்டுறவு வங்கியின் சர்வர் ஹேக் செய்து 12 கோடி திருட்டு