சென்னை தரமணி இணைப்பு சாலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச்.14) சென்னை DLF டௌன்டவுன் தரமணி "ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்"-ன் மிகப்பெரிய உலகளாவிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
டிட்கோவின் 50 கோடி ரூபாய் முதலீட்டுப் பங்குடன் மேற்கொள்ளும் இந்த கூட்டு முயற்சி செயல்திட்டத்தில், இந்த ஐடி (IT) மற்றும் ஐடிஇஎஸ் (ITES) பூங்காவானது 6.8 மில்லியன் சதுர அடி பரப்பில், 27 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ளது.
5000 கோடி ரூபாய் முதலீட்டைக் கொண்டிருக்கும் இந்த செயல்திட்டத்தில், DLF நிறுவனம் இத்தொகையை படிப்படியாகத் தேவைப்படும் காலகட்டங்களில் முதலீடு செய்யும். இந்த DLF டௌன்டவுன் வளாகம், பணியாளர்களுக்கென நலவாழ்வு மையம் மற்றும் உடற்பயிற்சி நிலையம், சிற்றுண்டி உணவகங்கள், குழந்தைகள் காப்பகம், அங்காடி, கருத்தரங்கு மற்றும் கூட்ட அரங்குகள், பிரத்யேக உணவுக் கூடங்கள் போன்ற பல்வேறு வசதிகளுடன் வடிவமைக்கப்பட உள்ளது.
இக்கட்டடங்கள் பாரம்பரியமாகவும், அலுவலகங்களிலிருந்து மாறுபட்டு பணியாற்றுவதற்கான, சிறப்பான மாற்று அமைவிடங்களையும் கொண்டு அமைக்கப்படவுள்ளது.
மேலும், இங்கு பணியாற்றும் பணியாளர்களுக்குப் புத்துணர்ச்சியை வழங்கவும், சமூகக் கலந்துரையாடலை ஊக்குவிப்பதற்கான வசதிகளையும் ஏற்படுத்த உள்ளது.
மேற்சொன்ன இத்தனித்துவமான வளாகத்தில் 1 மில்லியன் சதுர அடி பரப்பளவுள்ள கட்டடத்தில், ஏறக்குறைய 7.7 லட்சம் சதுர அடி பரப்பு அமைவிடத்திற்கு, டிட்கோ DLF கூட்டு முயற்சி நிறுவனம், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ் உடன் இணைந்து ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கிறது.
இதுபோன்ற பெரிய அளவிலான வர்த்தக அலுவலக செயல்திட்டங்கள், ஒரு டிரில்லியன் (ஒரு லட்சம் கோடி டாலர்) SGDP (மாநில அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி) என்ற இலக்கை 2030ஆம் ஆண்டுக்குள் எட்டுவதற்குத் தமிழ்நாட்டிற்கு வாய்ப்புகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில், உயர் கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டப்பேரவை உறுப்பினர் ஜே.எம்.எச். ஹசன் மவுலானா, தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ். கிருஷ்ணன், அரசு உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 'தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடையும்' - முதலமைச்சர் நம்பிக்கை