கோயில் நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் திட்டம் தொடக்கம்! - temple jewelry new scheme
இந்து சமய அறநிலைத் துறைக்குச் சொந்தமான கோயில்களில் காணிக்கையாக வந்த நகைகளைத் தங்கக் கட்டிகளாக மாற்றும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலமாகத் தொடங்கிவைத்தார்.
![கோயில் நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் திட்டம் தொடக்கம்! கோயில் நகைகளை தங்க கட்டிகளாக மாற்றும் திட்டம் தொடக்கம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-13342994-thumbnail-3x2-seka.jpg?imwidth=3840)
சென்னை: முதல்கட்டமாக சமயபுரம் மாரியம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் ஆகிய கோயில்களில் 10 ஆண்டுகள் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய நகைகளை மும்பையில் உள்ள ஒன்றிய அரசுக்குச் சொந்தமான உருக்காலையில் கொடுக்கப்பட்டு 24 கேரட் தங்கக் கட்டிகளாக மாற்றி வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது.
![கோயில் நகைகளை தங்க கட்டிகளாக மாற்றும் திட்டம் தொடக்கம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13342994_12.jpg)
இதில் கிடைக்கும் வட்டி வருவாய் மூலம் கோயில்களின் திருப்பணிகள் உள்ளிட்ட இதர திட்டங்களுக்குப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
![கோயில் நகைகளை தங்க கட்டிகளாக மாற்றும் திட்டம் தொடக்கம்!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/13342994_21.jpg)
முன்னதாக நேற்று (அக். 12) கோயில் நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல்செய்யப்பட்ட மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், 1977ஆம் ஆண்டுமுதல் கோயில் நகைகள் உருக்கப்பட்டுவருவதாகவும், ஐந்து லட்சம் கிலோ நகைகள் ஏற்கனவே உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக மாற்றி டெபாசிட் செய்ததன் மூலம் ஆண்டுக்கு 11 கோடி ரூபாய் வட்டி வருவாய் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகைகளைத் தணிக்கை செய்ய உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும், உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் இருவரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நீட் விலக்கு விவகாரம்: ஆளுநரைச் சந்திக்கும் ஸ்டாலின்