சென்னை: பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல மருத்துவரின் மறைவை ஒட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவருடன், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஆகியோர் மருத்துவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மருத்துவரின் மறைவு குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், பிரபல காது மூக்கு தொண்டை மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அவர்களின் தந்தையும், பத்மஸ்ரீ விருது பெற்ற புகழ்மிக்க மருத்துவருமான காமேஸ்வரன் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்திற்கும், வேதனைக்கும் உள்ளானேன்.
அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர் காமேஸ்வரன் அவர்கள் காது, மூக்கு, தொண்டை மருத்துவத்தில் தனித்துவமிக்க நிபுணத்துவம் பெற்றவர். எண்ணற்ற இளம் மருத்துவர்களை உருவாக்கியவர். 50 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களுக்கு மருத்துவச் சேவை புரிந்து, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் உலக அரங்கில் நற்பெயர் ஈட்டித் தந்த பெருமைக்குரியவர்.
முத்தமிழறிஞர் கருணநிதிக்கு ஈடு இணையற்ற நண்பராக இருந்தவர். தனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய தந்தையை இழந்து வாடும் காது மூக்குத் தொண்டை நிபுணர் மோகன் காமேஸ்வரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ரூபி க்யூபில் ஸ்டாலின் உருவப்படம்.. சிறுவனுக்கு பெரியார் சிலை பரிசு..