விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட புதிய பல்கலைக்கழகத்தை தொடங்க சட்டப்பேரவை விதி எண் 110இன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை என்ற நிலை வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாட்டில் உயர் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து பல அரசு கலைக் கல்லூரிகளையும், பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகளையும் பிற உயர்கல்வி நிறுவனங்களையும் தொடங்கினார்.
அவர் வழியில் செயல்படும் இந்த அரசும் பல உயர்கல்வி நிறுவனங்களைத் தொடர்ந்து உருவாக்கியும், பல உயர் கல்வி நிறுவனங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்தியும் வருகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் கிராமப்புறங்கள், மூலைமுடுக்கில் உள்ள ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்வி கனவு நனவானது.
அகில இந்திய அளவில் உயர் கல்விபெறுவோரின் விகிதம் 26.3 விழுக்காடு என இருக்கும்போது தமிழ்நாட்டில் மிக அதிகமாக 49 விழுக்காடு என்ற அளவில் உள்ளது.
சட்டத் துறை அமைச்சரின் கோரிக்கையை ஏற்று விழுப்புரம் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று திருவள்ளூர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து, விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு புதிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். இப்பல்கலைக்கழகம் நடப்பாண்டிலேயே செயல்படத் தொடங்கும்" என்றார்.
இதையும் படிங்க: கிராமப்புற வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டம் இல்லை என்பது வருந்தத்தக்கது - சு. வெங்கடேசன் எம்பி