பரபரப்பான சென்னை மாநகரின் சென்ட்ரல் அருகே உள்ள பூங்கா ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு மத்தியில் தன் நண்பர்களான ரயில்வே காவல் துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல் துறையினருடன் தன் கடமையை செவ்வனே செய்து வந்தாள் சின்னப்பொன்னு... ஆனால் அவளுக்கு இப்படி ஒரு கொடுமை நிகழும் என எதிர்பார்த்திருக்க மாட்டாள்... அங்கிருந்து வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் செல்லப்பட்ட சின்னப்பொன்னு ஈடிவி பாரத்தின் முயற்சியால் மீண்டும் பூங்கா ரயில் நிலையம் கொண்டுவரப்பட்டாள்...
எங்கோ பிறந்து ரயில் நிலைய வளாகத்தில் காவலாளியாக இருந்து வளர்ந்து வந்தது அந்த சின்னப்பொன்னு என்ற நாய். இதனை யாரும் பராமரிக்கவோ வளர்க்கவோ இல்லை. தன்னையும் தற்காத்துக்கொண்டு பயணிகளுக்கும் பாதுகாவல் அளித்துவந்தது.
பூங்கா ரயில் நிலைய அலுவலகம் அருகில் எப்போதும் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கும் சின்னப்பொன்னு காவல்துறையினரின் செல்லப்பிள்ளையாக இருந்ததோடு, பயணிகளின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த தவறியதில்லை.
ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் பாதுகாப்பில் முழு அக்கறை காட்டிவந்த அந்த ஐந்தறிவு ஜீவி ரயில் நிலையத்தின் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு தண்டவாளம் வழியாக இறங்கிச் செல்பவர்களை விட்டுவைப்பதில்லை. அவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில், குரைத்து விரட்டி அதற்கான சரியான வழியில் பயணிக்கச் செய்து வந்தது.
அதுமட்டுமின்றி, படிகளில் தொங்கியபடி யாரேனும் ரயிலில் பயணித்தால் உடனே அவர்களையும் விரட்டி ரயிலின் உள் பகுதிக்கு செல்ல வைத்து மனித உயிர்களை மறைமுகமாக காவல்துறையினருடன் இணைந்து காத்து வந்ததே சின்னப்பொன்னுவின் தலையாய பணியாகும். யாருக்கும் எவ்வித தொந்தரவும் இன்றி ரயில் நிலையத்தில் வலம் வந்துகொண்டிருந்த சின்னப்பொன்னு நாய் பற்றிய செய்தி ஊடக வெளிச்சத்திற்கு வந்த நிலையில், அதனை பிடிக்க மாநகராட்சி தீவிரம் காட்டி வந்ததாகத் தெரிகிறது.
இதனிடையே, மாநகராட்சி பிராணிகள் பிடிக்கும் வாகனத்தில் கதறக் கதற கயிற்றால் இழுத்துக் செல்லப்பட்டது அந்த வாயில்லா ஜீவன். எந்த பாவமும் அறியாத அந்த உயிரை கொடூரமான முறையில் இழுத்துச் செல்லப்பட்டது குறித்து ஈடிவி பாரத் சம்பந்தப்பட்ட துறைக்கு எடுத்துச் சென்றது. அதற்கு விளக்கம் அளித்த மாநகராட்சி நிர்வாகம், பூங்கா ரயில் நிலையத்தில் நாய்கள் தொல்லை இருப்பதாக வந்த புகாரின் பேரில் அங்கு சுற்றித்திரியும் நாய்களை குறிவைத்ததாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சின்னப்பொன்னு யாருக்கும் தொந்தரவு இன்றி காவல் பணியையே செய்து வந்ததாகக் கொடுத்த அழுத்தம் காரணமாக அதனை மீண்டும் கொண்டு வந்து விடுகிறோம் என அலுவலர்கள் தெரிவித்தனர்.
பூங்காவின் செல்லப்பிள்ளையாக இருந்த சின்னப்பொன்னு மீண்டும் ரயில் நிலையத்திலேயே சுதந்திரமாக விடப்படுமா என்ற எதிர்பார்ப்பில் இருந்த நிலையில், பிடித்துச் செல்லப்பட்டது சின்னப்பொன்னு நாய் அல்ல என்று அங்குள்ள கடைக்காரர்கள் தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் பிடித்துச் செல்லப்பட்டது சின்னப்பொன்னுதானா, அப்படி சின்னப்பொன்னு நாயை மாநகராட்சி பிடித்துச்செல்லவில்லை என்றால் சின்னப்பொன்னுவின் நிலை என்ன உள்ளிட்ட கேள்விகள் தற்போது எழுந்திருக்கிறது.