செட்டிநாடு குழுமத்திற்குச் சொந்தமான இடங்களில் நடத்திய வருமான வரி சோதனையில் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததை கண்டுபிடித்துள்ளனர்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட செட்டிநாடு நிறுவனம் சிமென்ட், கட்டுமானம், லாஜிஸ்டிக்ஸ் என இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனமானது வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்தப்புகாரின் அடிப்படையில் சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், ஆந்திரபிரதேஷ், கர்நாடகா, மும்பை உள்ளிட்ட 60 இடங்களில் கடந்த 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் செட்டிநாடு குழுமம் 700 கோடி ரூபாய் வரை, வருமானத்தை கணக்கில் காட்டாமல் வரி ஏய்ப்பு செய்தது தெரியவந்துள்ளது. லாபத்தைக் குறைத்துக்காட்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதை வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் கணக்கில் வராத பணம் ரூபாய் 23 கோடியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் செட்டிநாடு குழுமம் வெளிநாட்டில் 110 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கியதற்கான ஆவணங்களும், பல்வேறு வங்கிகளில் நிரந்தர வைப்புத்தொகை வைத்ததற்கான ஆவணங்களையும் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனடிப்படையில் செட்டிநாடு குழுமத்தின் மீது கறுப்புப்பண தடைச்சட்டத்தின்கீழ், நடவடிக்கை எடுத்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். லாபத்தைக் குறைத்து காட்டி, போலியான ஆவணங்கள் மூலம் மோசடி செய்தும், மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது பெறப்பட்ட நன்கொடை மற்றும் போலி ரசீதுகளை மறைத்த சுமார் 435 கோடி ரூபாயை கண்டுபிடித்துள்ளனர்.
செட்டிநாடு குழுமமானது மற்ற குழுமத்துக்குப் பல துறைமுகங்களில் உள்ள கட்டுமானங்களை விற்பனை செய்ததில் நடந்த பரிவர்த்தனைகளை கண்டுபிடித்துள்ளனர்.
அதில் முறையாக கணக்கு காட்டாத ரூ.280 கோடியை கண்டுபிடித்துள்ளனர். செட்டிநாடு குழும நிறுவனங்களிடையே நடந்த போலி பரிவர்த்தனைகளை வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. பல்வேறு முக்கிய ஆவணங்களையும் லாக்கர்களையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்து வைத்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சோதனை தொடர்பாக செட்டிநாடு குழுமத்தின் நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி, விசாரணை நடத்தவும் வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும்வரை காத்திருங்கள்