சென்னை ஓட்டேரி எஸ்.வி.எம். பகுதி நடைமேடையில் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரிகளான ராஜேஸ்வரி, விஜயலட்சுமி, பிரபாவதி ஆகியோர் வசித்து வந்தனர். இதில் கடந்த ஜூன் மாதம் 25ஆம் தேதி பிரபாவதி உடல் நிலை சரியில்லாமல் இறந்து கிடந்துள்ளார்.
அப்போது கரோனா அதிக அளவு பரவி வந்த நிலையில், யாரும் உதவ முன்வராததால், நடைமேடையில் இருந்த பிரபாவதியின் சடலத்தை, தலைமைச் செயலக காலனி ஆய்வாளர் ராஜேஷ்வரி தலைமையிலான காவல் துறையினர் இறுதிச் சடங்கு செய்து, உடலை அடக்கம் செய்தனர். அதனைத் தொடர்ந்து தினமும் தலைமைச் செயலக காலனி காவல் துறையினர், நடைமேடையில் தங்கி வரும் சகோதரிகளான ராஜேஷ்வரி, விஜயலட்சுமிக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில் இதேபோல் தலைமைச் செயலக காலனி காவல் துறையினர் உணவு, உடை வழங்குவதற்காக, கடந்த 10ஆம் தேதி இருவரையும் தேடி, ஓட்டேரி எஸ்.வி.எம். காலனிக்குச் சென்றபொழுது, மழையில் இருவரும் ஓரமாக அமர்ந்திருந்தனர். அப்போது அருகிலிருந்த நபர்கள் இருவருக்கும் சொந்த வீடு உள்ளதாகவும்; அது சுமார் 10 ஆண்டுகளாக பூட்டியே கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, காவலர்கள் பூட்டிய வீட்டைத் திறந்து உள்ளே பார்க்கும் போது, வீடு முழுவதும் குப்பைக் காடாக காட்சி அளித்துள்ளது.
இது குறித்து காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரி, மாநகராட்சி ஊழியர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் அங்கு விரைந்த காவல் துறையினர், குப்பைகளை அகற்றும் பணிகளில் சுமார் இரண்டு நாட்களாக ஈடுபட்டனர்.
அதில் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரிகள் சேமித்து வைத்த குப்பையை 14ஆயிரம் ரூபாய்க்கு விற்றும், அதில் மறைமுகமாக அச்சகோதரிகள் சேர்த்து வைத்த ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணம் மற்றும் ஏழு சவரன் தங்க நகைகள், 49 கிராம் வெள்ளிப் பொருட்கள் ஆகியவற்றை மீட்டு, காவல் துறையினர் இருவரிடமும் வழங்கியுள்ளனர்.
மேலும் வீட்டை சுத்தப்படுத்திவிட்டு அத்தியாவசியத் தேவைகளான பொருட்களை வாங்கிக் கொடுத்து, தலைமைச் செயலக காலனி காவல் துறையினர் சென்றுள்ளனர்.
இந்த சேவையை செய்த தலைமைச் செயலக காலனி காவல் ஆய்வாளர் ராஜேஷ்வரி மற்றும் அவரது குழுவினருக்குப் பாராட்டு குவிந்து வருகிறது.
இதையும் படிங்க...100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ஆளும் கட்சி மோசடி செய்துள்ளது - பார்த்திபன் எம்பி