சென்னை: கொலை, கொள்ளை, மிரட்டல் உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தேடப்பட்டுவந்த பிரபல ரவுடி சி.டி. மணி, கடந்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி போரூர் பாலத்திலிருந்து தப்பியோட முயன்றபோது வளசரவாக்கம் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க ஜூன் 26ம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
மணி மீதான குண்டர் சட்டத்தை எதிர்த்து அவரது தந்தை பார்த்தசாரதி தாக்கல்செய்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆர்.என். மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அடாவடியாக வீட்டில் கைது
அப்போது மனுதாரர் தரப்பில், தன் மகனை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், காவல் துறையினர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கி முனையில் சி.டி. மணியை கைதுசெய்ததாகவும், ஆனால் போரூர் பாலத்தில் கைதுசெய்ததாக கதை ஜோடித்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.
ஆவணங்களை தெளிவாக வழங்காமல் குண்டர் சட்டத்தில் அடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
காவல் துறை தரப்பில் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டதால்தான் சி.டி. மணி கைதுசெய்யப்பட்டதாகவும், குற்ற வழக்குகளின் தீவிரத்தைப் பொறுத்தே குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆவணங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆவணங்கள் சரியாகச் சமர்ப்பிக்கப்படவில்லை
பின்னர் நீதிபதிகள் உத்தரவில், மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழ் நகலை முறையாக வழங்கவில்லை என்றும், சில பக்கங்களில் தெளிவு இல்லை என்றும் சுட்டிக்காட்டினர். இதனடிப்படையில் சி.டி. மணியை குண்டர் சட்டத்தில் அடைத்த சென்னை மாநகர காவல் ஆணையரின் உத்ததவை ரத்துசெய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ராஜேந்திரபாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டம் இல்லை - காவல் துறை