கடந்த 20170ஆம் ஆண்டு, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையின் அடிப்படையில், 2011-12ஆம் ஆண்டு முதல் 2018-19ஆம் ஆண்டு வரையிலான அவரது வருமானவரிக் கணக்குகளை வருமான வரித்துறை மறு மதிப்பீடு செய்துவருகிறது.
அப்போது, 12 சாட்சிகளில் 5 பேரை மட்டுமே விஜயபாஸ்கர் தரப்பு குறுக்கு விசாரணை செய்ய வருமான வரித்துறை அனுமதித்திருந்த நிலையில், எஞ்சியுள்ள சேகர் ரெட்டி, சீனிவாசுலு, மாதவ் ராவ், முகமது அப்துல்லா, கிரிட்லைன் சர்வே நிறுவனத்தின் பொறியாளர், மதிப்பீடு அலுவலர் ஆர். கோபாலகிருஷ்ணன், புதுக்கோட்டை ஆர். வெங்கடேசன் ஆகிய 7 பேரையும் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க உத்தரவிடக்கோரியும் தனக்கு எதிராக திரட்டபட்ட ஆவணங்களின் நகல்களை வழங்கக் கோரியும் அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், வருமானவரித்துறையிடம் மார்ச் 13ஆம் தேதி முதல் டிசம்பர் 11ஆம் தேதி வரை 10 முறை மனு அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, வருமானவரித்துறையின் நிலைப்பாடு ஒரு அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. அதில், சேகர் ரெட்டி, மாதவராவ், புதுக்கோட்டை வெங்கடேசன் ஆகியோரிடம் எவ்வித தகவலையோ, வாக்குமூலத்தையோ தாங்கள் பெறவில்லை என்பதால் அவர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் குறுக்கு விசாரணை செய்ய அவசியம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சீனிவாசுலு உள்ளிட்ட நால்வரிடம் குறுக்கு விசாரணை செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் விஜயபாஸ்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மூவரிடம் குறுக்கு விசாரணை செய்யாவிட்டாலும், அவர்களிடம் பெறப்பட்ட ஆவணங்களை தங்களுக்கு தர வேண்டுமென வாதிட்டார். தங்களுக்கு நோட்டீஸ் கூட கொடுக்காமல் மறுமதிப்பீடு நடைமுறை நடைபெற்றுள்ளதாகவும் குறுக்கு விசாரணை செய்ய அவகாசம் நிர்ணயிக்க வேண்டுமெனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
அப்போது, நோட்டீஸ் கொடுக்காதது தொடர்பாக இந்த வழக்கு தொடரப்படவில்லை என்றும் குறுக்கு விசாரணை அவகாசம் குறித்த விவகாரத்தில் வருமானவரித்துறையும் அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்பும்தான் முடிவெடுக்க வேண்டுமெனவும் கூறிய நீதிபதி, அது நீதிமன்றத்தின் வேலை இல்லை என்றார். மேலும், 7 சாட்சிகளில் 4 சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதித்த வருமானவரித்துறை விளக்கத்தை ஏற்று அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கை முடித்துவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை உருவாக்க வேண்டும் என உழைக்கும் திமுக...!' - பாஜக சாடல்