சென்னை: ஆவடி அடுத்த நெமிலிச்சேரியை சேர்ந்தவர் அன்பழகன் என்பவரது மகன் சபரிமுத்து என்கிற ஆகாஷ்(25). இவர் நடுகுத்தகையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் (Gym Trainer) உடற்பயிற்சி ஆசிரியர் ஆகப் பணியாற்றி வந்தார். 25 வயதான ஆகாஷ் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து, மாநில அளவிலான போட்டியில் பங்குபெற்று வெற்றிப் பெற வேண்டும் என கடுமையாக பயிற்சி செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி, திடீரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். பின்னர், அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக தெரிவித்து உள்ளனர். இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த சபரிமுத்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற சபரிமுத்து கடுமையாக உடற்பயிற்சி செய்து வந்துள்ளார். மேலும், கட்டுடல் கொண்டு வர ஸ்டிராய்டு ஊசி செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு கிட்னியும் செயல் இழந்து ஆகாஷ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: "சரக்கு வாங்க காசு இல்லை" ஏடிஎம் மெஷினை உடைத்த நபரின் பகீர் வாக்குமூலம்!
இதன் பிண்ணனியில், அவர் ஸ்டிராய்டு மருந்துகளை எடுத்துக் கொண்டாரா? எதனால் அவரது சிறுநீரகங்கள் செயலிழந்தன? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. மேலும், ஸ்டிராய்டு மருந்துகளை அவர் எங்கு போய் வாங்கினார்? மருத்துவரின் பரிந்துரையில்லாமல் சென்னை ஆவடி பகுதியில் உள்ள மருந்தகங்களில் கிடைக்கின்றனவா? என்பன உள்ளிட்ட அடுக்கடுக்கான பல கேள்விகளை எழுப்பி உள்ளன இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வாறு உடற்பயிற்சி நிலையங்களுக்கு செல்லும் இளைஞர்கள், ஆணழகன் போட்டியில் வெற்றி பெறுவதற்கு ஆபத்தான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் காட்டும் ஆர்வம் ஒருகட்டத்தில் இத்தகைய வழிகளில் தடம் மாறிச் சென்று விபரீத விளைவை ஏற்படுத்துவதாக பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவர்களின் தகவல்கள் திருட்டு: முக்கிய நபருக்கு போலீசார் வலைவீச்சு!