மக்களவைத் தேர்தலையொட்டி பறக்கும் படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். உரிய அனுமதி இன்றியும் ஆவணங்கள் இன்றியும் கொண்டு செல்லப்படும் பொருட்கள், பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது .
இந்நிலையில், சென்னை முகப்பேர் மேற்கு பேருந்து நிலையம் அருகே நேற்றிரவு (ஏப்ரல் 8) தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் செந்தில்குமார், ராஜாராம் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தை சோதனையிட்டதில் உரிய ஆவணங்களின்றி 2 கோடியே 75 லட்சம் ரூபாய் கொண்டு செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவற்றை பறக்கும்படையினர் பறிமுதல் செய்தனர்.
அந்த வாகனத்தில் வந்தவரை விசாரித்ததில், அந்த நபர் நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த மாதவன் (27) என்பதும், தனியார் ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்ப எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து சென்னை வளசரவாக்கம் மண்டல அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.