சென்னையில் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், விமான நிலைய ஆணையக இயக்குனர் சுனில் தத்தை சந்தித்து சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தில் இருந்த பெருந்தலைவர் காமராஜர் பெயரையும், பன்னாட்டு முனையத்தில் இருந்த பேரறிஞர் அண்ணா பெயரையும் மீண்டும் வைக்க வேண்டும். மேலும் அவர்களின் முழு உருவ சிலைகளையும் முனையங்கள் முன்பு வைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.
பின்னர் என்.ஆர். தனபாலன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சென்னை விமான நிலையம் 1986ஆம் ஆண்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது உள்நாட்டு முனையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரும், பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரும் வைக்கப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக புதிய கட்டடங்கள் கட்டப்படுவதாக கூறி காமராஜர், அண்ணா பெயர் பலகைகள் எடுக்கப்பட்டுவிட்டன.
காமராஜர், அண்ணா பெயர்களில் முனையம் என்ற அடையாளம் தற்போது இல்லை. விமான நிலைய இயக்குனரைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்" என்றார்.
இதையும் படிங்க: பெயர்ப் பலகைகளில் தமிழை வலியுறுத்தி பேரணி!