சென்னை அம்பத்தூரை அடுத்த பாடி - முகப்பேர் சாலையைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (29). இவரது நண்பர் சுரேஷ் (27). இவர்கள் இருவரும் சரவணன் என்பவரிடம் தண்டலுக்குப் பணம் வசூல்செய்யும் ஊழியர்களாக வேலைசெய்து வருகிறார்கள்.
இதற்கிடையில், பாலகிருஷ்ணன், சுரேஷ் இருவரும் தண்டல் பணத்தை வசூல் செய்துவிட்டு மாலையில் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். பின்னர், இவர்கள் இருவரும் வீட்டிலிருந்தபோது சுமார் 25 வயது மதிக்கத்தக்க நான்கு இளைஞர்கள் வீட்டுக்குள் திடீரென்று புகுந்துள்ளனர்.
அவர்கள் அனைவரும் முகத்தை மூடிக்கொண்டு இருந்துள்ளனர். இதன் பிறகு, அவர்கள் பாலகிருஷ்ணன், சுரேஷ் இருவரையும் கத்தியைக் காட்டி வெட்டிக் கொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இதில், பாலகிருஷ்ணனும் சுரேஷும் பலத்த காயம் அடைந்து கீழே விழுந்தனர். இதன் பிறகு, இருவரும் வைத்திருந்த 40 ஆயிரம் ரொக்கப்பணம், விலை உயர்ந்த நான்கு செல்போன்கள் ஆகியவற்றைப் பறித்துக்கொண்டு அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பி உள்ளனர்.
இதில் படுகாயமடைந்த இருவரும் பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இது குறித்து பாலகிருஷ்ணன் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
காவல் ஆய்வாளர் பரணிதரன் தலைமையில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும், காவலர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்த நான்கு நபர்களை அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் தேடிவருகின்றனர்.