சென்னை: தொகுதி மேம்பாட்டு நிதியை தவறாக பயன்படுத்தியாதாக தி.நகர் அதிமுக எம்.எல்.ஏ. சத்யா மீதான புகாரில் நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், லஞ்ச ஒழிப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராயபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்த் தாக்ஷன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், ”தி.நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏ தி.நகர் சத்யா என்கிற சத்தியநாராயணனுக்கு, 2017-18 சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், குடிநீர் வசதி மேம்பாட்டிற்காக 2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 2017 மே 29ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
மழை காலத்தில் குடிநீருக்காக சிரமப்படும் பொதுமக்களுக்கு, குழாய்கள் அமைக்க பயன்படுத்த வேண்டிய தொகையில் 8 லட்ச ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது. மீதத்தொகையை 31 சாலைகள் பராமரிப்புக்காக செலவழித்து, அதற்கான டெண்டரை டி.எம்.சுப்ரமணியம் என்பவருக்கு மட்டுமே ஒதுக்ப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி அலுவலர்களின் கூட்டுடன் வேறு பணிக்கு நிதியை பயன்படுத்தி மோசடி செய்துள்ளதால், இது குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தக்கோரி கடந்த ஜனவரி 29ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறையில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். பால் வியாபாரியாக இருந்த சத்யாவிற்கு, தற்போது 200 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து உள்ளது” என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு நீதிபதி ஒத்திவைத்துள்ளார்.
இதையும் படிங்க: டி.ஆர்.பி. ராஜாவுக்கு எதிரான வழக்கிற்கு இடைக்காலத் தடை