சென்னை: சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் விவேகானந்தன் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் உச்சத்தில் இருந்தாலும், பரவலைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சளைக்காமல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், தொடர்ச்சியாக ஆய்வுக்கூட்டங்களை நடத்துவது, சுற்றுப்பயணம் செல்வது என சுழன்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சர் தன்னுடைய உடல்நலனையும் கவனத்தில் கொள்ளாமல், கடந்த மே 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவையில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனையை ஆய்வு செய்வதற்காக முழு கவச உடையணிந்து கரோனா வார்டிற்கு சென்றதையும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
மக்களின் நலனில் முதலமைச்சருக்கு அக்கறை உள்ளதுபோல், முதலமைச்சரின் நலனிலும் அனைவருக்கும் அக்கறை இருப்பதாகவும் மனுவில் தெரிவித்த அவர், அசாதாரண சூழ்நிலைகளைத் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் தொந்தரவு செய்யக்கூடாது என தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட கோரியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிகாரிகள் எவ்வாறு செயல்பட வேண்டுமென உத்தரவிட முடியாது எனக்கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் மனுத்தாக்கல் செய்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.
அபராதத்தொகையை முதலமைச்சரின் கரோனா நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும் என்றும், மனுதாரர், நீதிமன்றத்தில் அனுமதி பெறாமல் ஓராண்டிற்கு பொதுநல வழக்கு தொடர தடைவிதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கறுப்புப் பூஞ்சை தொற்று - மருந்துகள் வாங்க ரூ.25 கோடி ஒதுக்கீடு