சென்னை: 2019ஆம் ஆண்டு முகப்போரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் என்பவரைக் கடத்தி பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சொத்துக்களை அபகரித்ததாகத் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தொழிலதிபரைக் கடத்தியதாக உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டிய ராஜன் உள்ளிட்ட காவல் துறையினர் மற்றும் கோடம்பாக்கம் ஸ்ரீ கண்டன், ஆந்திர மாநில ரவுடிகள் தருண் கிருஷ்ண பிரசாத், சீனிவாச ராவ் உள்ளிட்ட 10 பேர் மீது சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 5 பேர் முன் பிணை பெற்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய கோடம்பாக்கம் ஸ்ரீ கண்டன், வெங்கட சிவநாககுமார், உதவி ஆணையர் சிவகுமாருக்கு உதவியதாக தனபால் உள்ளிட்ட மூன்று பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்து வரும் உதவி ஆணையர் சிவக்குமார் உட்பட காவல் துறையினருக்குச் சொந்தமான இடங்களில் சிபிசிஐடி காவல் துறையினர் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மேலும் மூவர் கைது
இந்த நிலையில் உதவி ஆணையர் சிவக்குமார் மற்றும் காவலர்கள் தலைமறைவாக இருக்கப் பணம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவி செய்ததாக சவுகத் அலி, நந்தகுமார் மற்றும் சரவணன் ஆகிய 3 பேரை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் அவர்களிடமிருந்து முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் உதவி ஆணையர் சிவக்குமார் உள்ளிட்ட காவலர்களை சிபிசிஐடி காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 6 நபர்களை சிபிசிஐடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: உக்ரைனில் இந்தியர் பலி: மாணவரின் தந்தைக்கு ஆறுதல் கூறிய பிரதமர்