சென்னை: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியிலிருந்து வரும் நரிக்குறவர்கள் நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் ஊசி பாசி மணி விற்பனை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அத்துடன் மாலை நேரத்தில் திருநெல்வேலி செல்லும் பேருந்தில் ஏறி வள்ளியூர் செல்கின்றனர்.
வழக்கம் போல் டிசம்பர் 9 ஆம் தேதி முதியவர், பெண்மணி, குழந்தை ஆகிய மூன்று பேர் வள்ளியூர் செல்ல பேருந்தில் ஏறியுள்ளனர். அப்போது முதியவர், பெண்மணி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதனால் பேருந்தில் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மூன்று பேரையும் பேருந்தில் இருந்து நடத்துநர் இறக்கி விட்டுள்ளார். அத்துடன் அவர்களின் உடைமைகளையும் தூக்கி வீசியுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பேருந்து ஓட்டுநர் நெல்சன் (45), நடத்துநர் ஜெயதாஸ் (44) ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து, அரசுப் போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டல பொதுமேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னை பெரம்பூர் பேருந்து நிலையத்தில் 242 எண் கொண்ட பேருந்தில் நரிக்குறவர் தம்பதி பயணம் செய்ய வந்தனர். அப்போது அவர்களின் காலில் பாலாபிஷேகம் செய்து பேருந்து ஊழியர்கள் அப்துல் மன்னன், மோகன், சதீஷ் பாபு, பூமணி ஆகியோர் வரவேற்றனர்.
இதையும் படிங்க: நரிக்குறவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட சம்பவம் : ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்