இது குறித்து தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலர் தீரஜ் குமார் வெளியிட்டுள்ள அரசாணையில், “தேசிய, சர்வதேச அளவிலான பாடி பில்டிங் போட்டிகளில் இந்தியாவின் சார்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஸ்கரன் கலந்துகொண்டு பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளார். மேலும் 52ஆவது பாடி பில்டிங் போட்டிகளில் பங்கேற்று 60 கிலோ உடல் எடைப்பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.
தாய்லாந்து சியாங்மை நகரில் நடைபெற்ற பத்தாவது உலக பாடி பில்டிங் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். பாஸ்கரன் பாடி பில்டிங் போட்டிகளில் தொடர்ந்து பெற்ற வெற்றிகளின் அடிப்படையில் இந்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கும் உயரிய விருதான அர்ஜுனா விருதினை 2019ஆம் ஆண்டு பெற்றுள்ளார்.
எனவே அவருக்கு 25 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையும் அவரது பயிற்சியாளர் அரசு என்பவருக்கு மூன்று லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.