சென்னை: இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த பின்னர் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஆ.ராசா தன்னுடைய தகுதியை இழந்து சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசியது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு பிறந்து இருந்தால் நல்ல மகன்கள். இந்துக்களுக்கு பிறந்து இருந்தால் அவர்கள் அனைவரும் விலைமாதுவின் மகன்கள் என அவர் பேசியது ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களையும் புண்படுத்தி உள்ளது.
மேலும் ஆ.ராசா மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து திமுகவில் இருந்து நீக்க வேண்டும், இல்லை என்றால் இது முதலமைச்சர் அனுமதியோடு பேசுவதாக தான் அர்த்தம். பாஜகவில் இப்படி பேசியவர்களை வட இந்தியாவில் இடை நீக்கம் செய்துள்ளோம். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதை இப்படியே பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இது ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் அவமானம்.
மக்களை ஏமாற்றி பிழைத்தது எல்லாம் போதும். தேர்தலில் சொல்வதை செய்யவில்லை. மின் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில் இதை திசை திருப்பும் வகையில் இப்படி பேசியுள்ளார். அவர் சொன்னதின் அடிப்படையில் பார்த்தால் தமிழ்நாட்டின் முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள் என எல்லோருக்கும் இது பொருந்துமா?. ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.
ஆ.ராசா இந்துக்கள் குறித்து பேசியதற்கு நிச்சயம் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:Viralஆகும் கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் பள்ளி நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட புகைப்படம்