திருப்பூர்: தாராபுரம் தாலுகா மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதியில் உப்பாறு அணை, பரம்பிக்குளம், ஆழியார், அமராவதி உள்ளிட்ட சுமார் 31 நீர் நிலைகளின் நீரை பயன்படுத்துவோருக்கான சங்கத்துக்கு நிர்வாகக்குழு தேர்தலை நடத்த குமரேசன் என்பவரை தேர்தல் அலுவலராக நியமித்து, மாவட்ட ஆட்சியர் தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.
தேர்தல் அலுவலரான குமரேசன், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ரகசிய வாக்கெடுப்பை நடத்தி, வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்களை எந்த ஒரு காரணமும் தெரிவிக்காமல் நிராகரித்தும், நிர்வாக குழுவினுடைய 31 தலைவர்கள் மற்றும் 136 உறுப்பினர்களை தேர்வு செய்தும் ஒருதலைபட்சமாக செயல்பட்டுள்ளதாக கூறி, பாரதிய ஜனதா கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட துணைத் தலைவர் சுகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், தேர்தல் நடைமுறையை முறையாகப் பின்பற்றாமல் நிர்வாகக் குழுவை தேர்வு செய்தது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் அலுவலர் செய்த முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு, இந்த விவகாரம் தொடர்பாக இதனை தேர்தல் வழக்காகத்தான் தொடர முடியும் என தெரிவித்ததுடன், தேர்தலில் போட்டியிடும் தந்தைக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு பொது நல வழக்கல்ல எனவும், தனி நபர் வழக்கு எனவும்; இந்த வழக்கில் மனுதாரர் கோரிய உத்தரவைப் பிறப்பிக்க முடியாது எனக்கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையும் படிங்க:பாசனத்திற்காக மேட்டூர் அணை மே 24 இல் திறப்பு - முதலமைச்சர் அறிவிப்பு