சென்னை அம்பத்தூர் எம்ஜிஆர் தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் முரளி(28). இவர் கடந்த திங்கள்கிழமை அதிகாலையில் சவாரிக்காக புறப்பட்டுச் சென்றார். இவர், அதே பகுதியில் உள்ள சக்தி நகர் சர்வீஸ் சாலை வழியாக சென்றுகொண்டிருந்தபோது இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இவரது ஆட்டோவை வழிமறித்துள்ளனர்.
பின்னர், அவர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி முரளியிடம் இருந்து ஆட்டோ மற்றும் அவரிடமிருந்த இரண்டாயிரத்து 500 ரூபாய் பணத்தையும் பறித்துக்கொண்டு மிரட்டி அனுப்பியுள்ளனர். இதையடுத்து, முரளி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதனடிப்படையில் ஆய்வாளர் சிதம்பர முருகேசன் தலைமையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், முரளியை தாக்கி பணம் பறித்தது அதே பகுதியைச் சேர்ந்த குமுடி தினேஷ்(24), அவரது கூட்டாளி குமார்(31) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களைக் கைது செய்த காவல் துறையினர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: இந்த ஆட்டோ வீட்டுல இப்பவே குடியேறணும்னு இருக்கே!