சென்னையில் கடந்த ஜனவரி 26ஆம் தேதி அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் குண்டு வீச வந்தவர்களை விரட்டியதை அடுத்து தப்பியோடினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மயிலாப்பூர் காவல் துறையினர் அவர்கள் வந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சக்தி, தீபன், கண்ணன், ஜனார்த்தனன், வாசுதேவன், பாலு, சசிகுமார், தமிழ், குமரன், பிரசாந்த் ஆகியோரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பத்து பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து பத்து பேரின் உறவினர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
அதில், ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் மத்திய அரசின் உத்தரவுக்குப் பணிந்து தமிழ்நாடு அரசு அவர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதாகவும், காவல் ஆணையர் பிறப்பித்த இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இது அரசியல் ரீதியாக தொடரப்பட்ட பொய் வழக்கு என்றும், நடக்காத சம்பவத்தை நடந்ததுபோல கூறி 10 இளைஞர்களைக் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் வைத்துள்ளதாகவும் வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல் துறை தரப்பு வழக்கறிஞர், அதிகாலையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதால் காவலர்கள் அவர்களைப் பிடிக்க முயற்சி செய்ததால் குண்டு வீசாமல் தப்பியோடிவிட்டதாகவும், அவர்கள் ஜாமினில் வெளிவந்தால் மீண்டும் அதே குற்றத்தைச் செய்ய வாய்ப்புள்ளதால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் மனுவுக்குப் பதிலளிக்கும்படி சென்னை மாநகர காவல் ஆணையர், மயிலாப்பூர் காவல் ஆய்வாளர் ஆகிய இருவருக்கும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: ஆடிட்டர் குருமூர்த்தியின் கனவு நிறைவேறாது - அமைச்சர் கே.சி.கருப்பணன்