தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் நீண்ட நாள் கோரிக்கையான விபிஎஃப் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று (டிசம்பர் 29) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒரு படத்தை திரையரங்கில் டிஜிட்டல் முறையில் திரையிடும்போது, திரையரங்கில் உள்ள டிஜிட்டல் புரொஜெக்டருக்கான கட்டணமாக தயாரிப்பாளர்களால் கொடுக்கப்பட வேண்டிய கட்டணமே விபிஎஃப் ஆகும். அத்துடன் எல்பிடி (லோக்கல் பாடி டேக்ஸ்) வரியையும் ரத்து செய்து, ஒரே மாதிரி வரி வசூலிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கௌரவ ஆலோசகர் டி. ராஜேந்தர் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின் போது டி.ராஜேந்தர் பேசுகையில், “அயல்நாடுகளில் பெரும்பாலும் விபிஎஃப் கட்டணம் கிடையாது. இங்கு தயாரிப்பாளர்கள் மீது கட்டணம் ஒரு சுமையாக செலுத்தப்படுகிறது. இந்த கட்டணத்தால் சிறுபட தயாரிப்பாளர்கள் முதல் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் வரை அனைவருமே பாதிப்புக்குள்ளாகின்றனர்.
ஆகையால் விபிஎஃப் கட்டணத்தை இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும். அதே போல் எல்பிடி (லோக்கல் பாடி டேக்ஸ்) வரியையும் ரத்து செய்யவேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்” என்றார். கூட்டத்தில் உஷா ராஜேந்தர், தலைவர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 2021ஆம் ஆண்டில் நம்மை விட்டு பிரிந்த திரை பிரபலங்கள்!