மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பட்டியலின மாணவர்களை கட்டி வைத்து தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டி கிராமத்தில், பட்டியலின பள்ளி மாணவர்கள் மிட்டாய் திருடியதாக தூணில் கட்டி வைக்கப்பட்டு, தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி அறிக்கை வெளியிட்டுள்ளது. மதுரை மாவட்டம், காரைகேணியை சேர்ந்த 2 பட்டியலின மாணவர்கள் திருமங்கலம் வட்டம் அச்சம்பட்டியில் உள்ள அரசு மேல் நிலை பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளியின் அருகே ஆதிதிராவிடர் நல விடுதியில் தங்கியுள்ளனர்.
இவர்கள் மார்ச் 21ஆம் தேதி அன்று ஆலம்பட்டிக்குச் சென்று அங்குள்ள சந்தோஷ் என்பவரின் கடையில் மிட்டாய் வாங்கியுள்ளனர். அப்போது கடையில் வாடிக்கையாளர்களும், அதிகமாக இருந்துள்ளனர். அத்தருணத்தில் கடைக்காரர் திடீரென இந்த இரு மாணவர்களும் மிட்டாய் திருடியதாக குற்றம்சாட்டி கூச்சல் போட்டுள்ளார். அதைத்தொடர்ந்து கடைக்காரரும் அவரது உறவினர்களும் சேர்ந்து 2 மாணவர்களையும் தூணில் கட்டி வைத்து அடித்துள்ளனர்.
இந்த தகவல் அறித்து அணைக்கரைபட்டியை பூர்வீகமாக கொண்ட விடுதி காப்பாளர் விஜயன் மற்றும் தாக்கப்பட்ட மாணவர்களில் ஒருவரது உறவினரும் ஆலம்பட்டிக்கு விரைந்து அவர்களிடம் சமாதானம் பேசி மாணவர்களை விடுவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் அறிவுறுத்தலின்படி, திருமங்கலம் தாலுகா காவல்துறை,கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் பெற்று, கடைக்காரர் சந்தோஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 294(b),323,342,506(1) of IPC மற்றும் பிரிவு 75 of JJ act (குழந்தைகள் மீதான வன்முறை) பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவர் த.செல்லக்கண்ணு, மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் செ.முத்துராணி, மாவட்டத் துணைத் தலைவர் வி.பி.முருகன், ஆதி தமிழர் கட்சியின் தோழர்கள் கருப்பசாமி, ஆனந்த் மற்றும் மகாலெட்சுமி ஆகியோர் ஆலம்பட்டி கிராமம், அச்சம்பட்டி பள்ளி, ஆதி திராவிடர் நல விடுதி, திருமங்கலம் காவல் நிலையம் ஆகிய இடங்களில் 03.04.23 திங்கட்கிழமை அன்று கள ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வின் அடிப்படையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அதில், மேற்கண்ட பிரிவுகளோடு எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைகள் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் படியும் வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்திட வேண்டும்.
மாணவர்களை வீட்டிற்கு அனுப்பிய ஆதி திராவிடர் நல விடுதி காப்பாளர் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாணவர்கள் இருவரையும் மருத்துவ ரீதியாக ஆற்றுப்படுத்தி (counciling), அவர்கள் படிப்பை தொடர்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்திட வேண்டும். பாதிக்கபட்ட மாணவர்களுக்கும், குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பும்,நிவாரணமும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ''தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தவே ஆதிதிராவிட நலப்பள்ளிகள் இணைப்பு''