சென்னை ராமபுரத்தைச் சேர்ந்த கி. வீரலட்சுமி, தமிழர் முன்னேற்றப்படை அமைப்பின் நிறுவனராக உள்ளார். கடந்த மார்ச் மாதம் இவரின் வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆபாச காணொலிகள் வந்துள்ளன.
இது தொடர்பாக அவர் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அப்புகாரின் பேரில் காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
ஆபாச காணொலி அனுப்பிய நபரை உடனடியாக மூன்று நாள்களில் கைதுசெய்ய வேண்டும் எனவும், இல்லையெனில் அந்நபரைத் தானே கண்டுபிடித்து நிர்வாணமாக பல்லாவரம் சந்தையில் கட்டிவைத்து பிறப்புறுப்பை அறுத்து சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கி. வீரலட்சுமி காணொலி பதிவுசெய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார்.
மேலும் தொடர்ந்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காததால் சென்னை விமான நிலையம் அருகில் உள்ள செல்போன் டவர் மீது ஏறி காணொலி அனுப்பியவரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் தான் கொடுத்த புகாருக்கு தற்போதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் வீரலட்சுமி மீண்டும் காணொலி பதிவுசெய்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
கத்தியைக் கையில் வைத்துக்கொண்டு அதில், "ஆபாசப் படம் அனுப்பிய இருவரும் நீதிமன்றத்திலோ அல்லது காவல் நிலையத்திலோ சரணடைந்துவிடுங்கள். இல்லையென்றால் என்னிடமோ எனது தொண்டர்களிடமோ சிக்கினால் உங்கள் பிறப்புறுப்பு அறுக்கப்படும். எனக்கு அரசியல் பலம், படை பலம், பண பலம் அனைத்தும் இருப்பதால் நான் நீதிமன்றத்தில் பணம் செலவு செய்து நீதியைப் பெற்றுக் கொள்வேன்.
ஆனால் சாதாரண தமிழ்ப் பெண்ணுக்கு எப்படி நீதி கிடைக்கும், தமிழ் பெண்ணின் மானம் என்றால் கேவலமாகப் போச்சா?" என அதில் கொதித்தெழுகிறார்.
இதையும் படிங்க: ஆபாசக் காணொலிகளை வெளியிடபோவதாக மிரட்டும் காவலர் மீது நடவடிக்கை எடுக்க புகார்