சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பொது ஊரடங்கின் காரணமாக மாணவர்களுக்கு தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு இறுதிப்பருவத் தேர்வுகளைத் தவிர, பிற பருவப் பாடங்களில் தேர்வுக் கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் வழிகாட்டுதலின்படி, அரியர் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
அதனடிப்படையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைச் சேர்ந்த அரியர் தேர்வு எழுத பணம் செலுத்திய மாணவர்களுக்கு அரசின் வழிகாட்டுதலின்படி குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்கி அண்ணாப் பல்கலைக் கழகம் தவிர உயர் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த பிற பல்கலைக்கழகங்கள் தேர்ச்சி வழங்கின.
இந்நிலையில், அரியர் மாணவர்களின் தேர்ச்சி குறித்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இறுதி தீர்ப்பினை வழங்காமல் உள்ளது. இதனால், பல பல்கலைக் கழகங்கள் அரியர் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வினை நடத்தி வருகிறது. ஆனால், இளங்களைப் படிப்பில் இறுதியாண்டில் படித்த மாணவர்கள் ஏற்கனவே உள்ள ஆண்டுகளில் அரியர் வைத்திருந்த பாடங்களில் தேர்ச்சி வழங்கி அறிவிக்கப்பட்டது.
ஆனால், நீதிமன்றத்தில் வழக்கின் இறுதித் தீர்ப்பு வழங்காமல் இருப்பதால் மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பட்டங்கள் வழங்கப்படாமல் உள்ளது. இதனால், அரியர் பாடத்துடன் இளங்கலைப் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்று முதுகலைப் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு பருவத் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருவள்ளூர் பல்கலைக் கழகத்தில் 2017-20ஆம் கல்வியாண்டில் படித்த மாணவர்களில் அரியர் வைத்திருந்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் பட்டியில் வழங்கப்படவில்லை. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பில் அரியர் இருந்தும், தேர்ச்சியளித்த மாணவர்கள் முதுநிலைப் பட்டப்படிப்பிலும் சேர்ந்த பின்னர் அவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்காத தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மாணவர்கள் கூறும் போது, "அரசு அறிவித்த விதிகளின் அடிப்படையில் ஒரு பாடத்தில் அரியர் வைத்திருந்த தாங்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டோம். ஆனால், முதுகலைப் படிப்பில் சேர்ந்த தங்களைப் பருவத் தேர்வு எழுத அனுமதி மறுக்கின்னர். உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், படித்தக் கல்லூரியிலும் பட்டம், சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது என குற்றஞ்சாட்டுகின்றனர்.
தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் கார்த்திக் நம்மிடையே பேசும்போது, அரசு அறிவிப்பின்படி அரியர் வைத்திருந்த மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டது. ஆனால், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தெளிவான உத்தரவினை வழங்கவேண்டும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 1100 குறை தீர்ப்பு அலைபேசியில் இருக்கும் குறைகள் என்னென்ன?