அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சூரப்பா கடந்த ஏப்ரல் 11ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகதீஷ் குமார், சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.பி.தியாகராஜன், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலர் ஷீலா ராணி சுங்கத் ஆகியோர் அடங்கிய தேடல் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விருப்பம் தெரிவிப்பவர்களிடம் இருந்து விண்ணப்பங்களைப் பெற்றது. ஆன்லைன் மூலம் 160 பேராசிரியர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், அதிலிருந்து 10 பேரை நேர்முகத் தேர்வுக்கு தகுதியானவர்களாக தேடல் குழு இறுதி செய்துள்ளது.
துணைவேந்தர் நேர்காணல்
அவர்களுக்கான நேர்காணல் வரும் 9ஆம் தேதி நடைபெறவுள்ளதாகவும் தேடல் குழு தெரிவித்துள்ளது. ஏற்கனவே துணைவேந்தர் பதவியில் இருந்து கொண்டே விண்ணப்பித்தவர்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை.
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஐந்து பேர், சென்னை ஐ.ஐ.டி.யின் பேராசிரியர்கள் இரண்டு பேர் என நேர்முகத் தேர்வுக்கு தகுதியான 10 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 9ஆம் தேதி நேர்காணல் நடத்தப்படவுள்ளதாக தேடல் குழுவின் உறுப்பினர் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தை ஆராய்ச்சியில் மேம்படுத்துவது, பல்கலைக்கழகத்தின் நிதித் தேவையை ஈடுகட்டுவது, உலகளாவிய தரவரிசையில் முன்னேற்றுவதற்கான திட்டங்கள் வகுப்பது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.
நேர்காணல் முடிந்த பின், அதிலிருந்து தகுதியான மூன்று நபர்களை இறுதி செய்து, அவற்றை ஆளுநரிடம் தேடல் குழு சமர்ப்பிக்கும். அந்த மூவரில் ஒருவரை துணைவேந்தராக தேர்வு செய்து ஆளுநர் அறிவிப்பு வெளியிடுவார்.
இதையும் படிங்க: ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்ற இந்தியா