பி.இ; பி.டெக் ஆகிய பொறியியல் படிப்புகளில் இறுதியாண்டு தவிர மற்ற மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுவது எப்படி என்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம், அதன் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் பயிலும் இறுதி ஆண்டு தவிர்த்த மற்ற மாணவர்கள் அனைவருக்குமான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனையடுத்து அந்த மாணவர்களுக்கான மதிப்பெண்கள் எவ்வாறு வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று செயல்படும் பி.இ, பி.டெக், பி.ஆர்க், எம்.இ, எம்.ஆர்க், எம்.பிளான் இளங்கலை, முதுகலை பாடப் பிரிவுகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் தவிர, மற்ற மாணவர்களுக்கு மதிப்பெண்கள் தயாரித்து வழங்க வேண்டும்.
செய்முறை அல்லாத படிப்புகளுக்கு முந்தைய பருவத்தில் இருந்து 30 விழுக்காடு மதிப்பெண்ணும், அக மதிப்பெண்களில் இருந்து 70 விழுக்காடு மதிப்பெண்ணும் எடுத்துக்கொண்டதன் அடிப்படையிலும் மதிப்பெண்கள் கணக்கிடப்படும்.
கடந்த செமஸ்டரில் வகுப்பிற்கு வராத மாணவர்களுக்கு அக மதிப்பீட்டை, தற்போது கணக்கிட தேர்வு நடத்த வேண்டும். அவ்வாறு நடத்தப்படும் தேர்வு, புத்தகத்தைப் பார்த்து எழுதும் வகையிலோ, அல்லது ஆன்லைன் முறையிலோ அந்தந்த துறைகள் மூலம் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்முறை வகுப்புகள் கொண்ட பாடங்களுக்கான மதிப்பெண்ணை, கடந்த செமஸ்டரில் நடத்தி முடிக்கப்பட்ட செய்முறைகளின் அடிப்படையில் 100 விழுக்காடு கணக்கிடவேண்டும்.
செய்முறை மற்றும் கருத்தியல் இரண்டும் இணைந்த பாடங்களுக்கான அக மதிப்பெண்களில் 70 விழுக்காடு அடிப்படையிலும், 30 விழுக்காடு கடந்த செமஸ்டர் மதிப்பெண் அடிப்படையிலும் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து போஸ்டர் அடித்த பத்தாம் வகுப்பு மாணவன்!