சென்னை: ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளராக அமுதா ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட 10 ஐ.ஏ.எஸ் அலுவலர்களை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலராக இருந்த கோபால் ஐஏஎஸ் போக்குவரத்து துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் ஆணையராக இருந்த பீலா ராஜேஷ் நிலநிர்வாகத் துறை முதன்மை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த அமுதா ஐஏஎஸ் ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுப்பணித் துறை செயலராக இருந்த சந்தீப் சக்சேனா நீர்வளத் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழில்துறை முதன்மை செயலராக இருந்த முருகானந்தம் நிதித்துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலராக இருந்த கிருஷ்ணன், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து துறை கூடுதல் தலைமைச் செயலராக இருந்த தயானந்த் கட்டாரியா, பொதுப்பணித்துறை முதன்மை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினராக இருந்த ரமேஷ் சந்த் மீனா, எரிசக்தித் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எரிசக்தித் துறை முதன்மைச் செயலராக இருந்த தர்மேந்திர பிரதாப் யாதவ், கைத்தறி துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கைத்தறி மற்றும் துணிநூல் துறை செயலராக இருந்த செல்வி அபூர்வா இளைஞர் நலத் துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்"என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றிருந்த போது அமுதா ஐஏஎஸ் சந்தித்திருந்தார். விரைவில் அவர் தமிழ்நாட்டிற்கு மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் பதவிக்காலத்தை பாதியிலேயே முடித்து கொண்டு மீண்டும் தமிழ்நாடு திரும்பியுள்ளார். இதற்கான ஆணையை ஒன்றிய அரசு வெளியிட்டிருந்த நிலையில் தற்போது, ஊரக வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சருக்கு பரிசளித்த காவலர்கள்; ஒரு நாள் விடுமுறைக்கு நன்றி