மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு பணிகளில் தரவுகளை நேரடியாக பெற்று ஆய்வு செய்திட வசதியாக, ’எய்ம்ஸ்’ என்ற கைபேசி செயலியை ’இன்ஃபோ மேப்ஸ்’ என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இச்செயலியானது, நேரடியான கள ஆய்வின்போது ஆய்வுப் பகுதிகளில் உள்ள அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், இயற்கை வளங்களை சேகரித்து காட்சிப்படுத்தி, தரவுகளை புவித் தகவலமைப்பு தளத்தில் நேரடியாக உள்ளீடு செய்வதுடன் பகுப்பாய்வு செய்தும் முடிவுகளை வழங்கும்.
மேலும், குடியிருப்புகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள், பொருளாதார நிலை ஆகியவற்றைக் கண்டறிந்து பகுப்பாய்வு செய்ய முடியும். வேளாண்மை, வன விலங்குகள், மீன் வளம், இயற்கைப் பேரிடர் சார்ந்த தரவுகளையும் நேரடியாகப் பெற்று பகுப்பாய்வு செய்து வழங்கும்.
இதன் மூலமாக வேளாண்மை, பொருளாதார முன்னேற்றம், சமுதாய மேம்பாடு, மனித வனவிலங்கு மோதல்களைத் தவிர்த்தல் ஆகிய பணிகளுக்கான தரவுகளை நேரடியாகப் பெற முடியும்.
இச்செயலிக்கான கையேட்டினை சி.பொன்னையன், மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு (முன்னாள் மாநில திட்டக் குழு) துணைத்தலைவர் வெளியிட முதல் நகலை முனைவர் பி. துரைராசு, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழு உறுப்பினர் செயலர் அனில் மேஷ்ராம் இச்செயலியை தொடங்கி வைத்தார். இச்செயலின் செயல்பாடுகள் குறித்து வளர்ச்சிக் கொள்கைக் குழு நில பயன்பாட்டுக் குழுமத் தலைவர், முனைவர். பு. செ.அர்ச்சனா கல்யாணி விவரித்தார்.