அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் உறுப்பினர் செயலாளர் ராஜீவ் குமார் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகம் ஊரடங்கு உத்தரவிற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
கோவிட் 19 பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலையை ஒவ்வொரு குடிமகனும் இணைந்து எதிர்க்க வேண்டும். கல்லூரிகளுடன் தொடர்புடையவர்கள் உடல்நலனைப் பாதுகாக்க வேண்டியது அந்நிறுவனத்தின் பொறுப்பாக இருக்கிறது.
ஊரடங்கு காலகட்டத்தில் மாணவர்களிடம் சேர்க்கைக் கட்டணம், கல்விக் கட்டணம் போன்றவற்றை கல்லூரிகள் கேட்டு வலியுறுத்துவதாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கழகத்திற்கு புகார்கள் வந்துள்ளன. எனவே ஊரடங்கு முடிந்து மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கும் வரையில் எந்தவிமான கட்டணங்களையும் கேட்கக் கூடாது. மேலும் இதுகுறித்து விதிமுறைகள் பின்னர் வெளியிடப்படும்.
ஊரடங்கு காலத்தில் சில கல்லூரிகள் சம்பளம் தராமல் உள்ளதாகவும், சில கல்லூரிகளில் ஊழியர்களை நீக்கம் செய்வதாகவும் புகார்கள் வந்துள்ளன. ஆகவே அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும். யாரையும் பணியிலிருந்து விடுவிக்கக் கூடாது. இதுகுறித்து அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் அறிவுரை வழங்கப்படும்.
கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பிரதமரின் சிறப்புக் கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் 2020-21ஆம் கல்வியாண்டிற்குரிய தொகை ஊரடங்கு முடிந்த பின்னர் விரைந்து வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவரும் நிலையில், இந்தப் பருவத்திற்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படும். பல்கலைக்கழக மானியக்குழு, அகில இந்திய தொழில்நுட்பக் குழுவின் மூலம் கல்வியாண்டிற்கான கால அட்டவணை, தேர்வு அட்டவணை போன்றவை மாற்றி வெளியிடப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனமுவந்து கரோனா நிவாரண நிதியளித்த தொடக்கப்பள்ளி மாணவர்கள்