சென்னை: அரும்பாக்கம் அடுத்த NSK நகரைச்சேர்ந்தவர் பூங்குழலி (28). இவருக்கு 6 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இன்று(அக்.9) அதிகாலை தனது குழந்தையை தூக்கிக்கொண்டு அமைந்தகரை பகுதியில் உள்ள அண்ணா நினைவு வளையம் அருகே சாலையைக்கடக்க முயன்றார்.
அப்போது மதுபோதையில் பெண் ஒருவருடன் அதிவேகமாக கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் நோக்கி சென்ற சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர், பூங்குழலி அவரது கைக்குழந்தை மீது வேகமாக மோதியுள்ளார். இதில் பெண்ணும் குழந்தையும் தூக்கி வீசப்பட்டனர்.
தூக்கி வீசப்பட்ட அடுத்து சம்பவ இடத்திலேயே தாயும் சேயும் உயிரிழந்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல் துறையினர் போக்குவரத்து புலனாய்வுப்போலீசார் பூங்குழலி மற்றும் அவரது குழந்தையின் உடல்களை மீட்டுப்பிரேதப்பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதையடுத்து அதிவேகமாக பைக்கில் வந்து, விபத்தை ஏற்படுத்திய அந்த நபரையும் அவருடன் வந்த பெண்ணையும் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர், ஐஐடி ப்ராஜெக்ட் அசோசியேஷனில் வேலை செய்துவரும் நிகில் என்பதும்; இவர் நேற்று இரவு நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற மது விருந்தில் கலந்து கொண்டு அதிகாலை அவரது பெண் தோழியை, தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக்கொண்டு, அதிவேகமாக சென்றபோது விபத்து ஏற்படுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து நிகில் மற்றும் அவரது பெண் தோழி கிருத்திகா இருவர் மீதும் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தேனியில் முன்விரோதம் காரணமாக கவுன்சிலர் கொலை - போலீஸ் விசாரணை