சென்னை: பெருநகர காவல் துறையில், 'காவல் கரங்கள்' என்ற அமைப்பு 2021 ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு மூலம், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் சுற்றித் திரியும் முதியோர்கள், பெண்கள், குழந்தைகளை உரிய பாதுகாப்புடன் மீட்டு, தேவைப்படுவோருக்கு மருத்துவம் அளிக்கப்பட்டுவருகிறது.
இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்தினர், ECCO வாகனத்தை ஆம்புலன்ஸ் வாகனமாக மாற்றியமைத்து, காவல் கரங்கள் அமைப்பின் சேவை பணிக்கு வழங்க முன்வந்தனர். இதற்கான நிகழ்ச்சி சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆம்புலன்ஸ் வாகனத்தை காவல் கரங்கள் அமைப்பினருக்கு சேவை மற்றும் மீட்புப் பணிக்கு வழங்கினார்.
இதையடுத்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மேடையில் பேசுகையில், "காவல் துறையினர் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து காவல் கரங்கள் பெயரில் சிறப்பாகப் பணியாற்றிவருகின்றனர். கடந்த 4 மாதங்களில் ஆதரவற்றோர், காணாமல்போன 944 நபர்களை மீட்டுள்ளோம்.
அவர்களில் 691 நபர்கள் தங்கும் இல்லங்களில் சேர்க்கப்பட்டும், 63 நபர்கள் அவர்களது குடும்பத்தாருடன் சேர்க்கப்பட்டும், 60 நபர்கள் மனநல மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டும், 130 ஆதரவற்ற பிரேதங்களை நல்லடக்கம் செய்தும் காவல் கரங்கள் சேவைப் பணி செய்துவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: தனியார் பள்ளிகளுக்கு நிதி வழங்க வேண்டும்