சென்னை தியாகராய நகரைச்சேர்ந்தவர் பார்த்தசாரதி - வசந்தி தம்பதி. பார்த்தசாரதி தொழிலதிபராக இருந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 1976ஆம் ஆண்டு இருவரும் அக்டோபர் மாதம் வெளிநாடு சுற்றுலாவிற்குச்சென்றனர்.
சுற்றுலா முடிந்து விமானம் மூலம் சென்னைக்குத் திரும்ப 1976ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி மும்பை விமான நிலையத்திற்குச் சென்றனர். தம்பதி இருவரும், இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தனர். அப்போது விமானம் புறப்படும் போது இன்ஜினில் கோளாறு ஏற்பட்டு விமானம் வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 95 பயணிகளும் இறந்தனர். அதில் பார்த்தசாரதி- வசந்தி தம்பதியும் அடங்குவர். அதன்பின் அவர்களுடைய இறப்புச்சான்றிதழ்களை அவரது குடும்பத்தினர் வாங்கவில்லை. விபத்து நடந்த போது பார்த்தசாரதி- வசந்தி தம்பதிக்கு மூன்று வயதில் ஆண் குழந்தையும், ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் இருந்தது. குழந்தைகளை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு, கணவன், மனைவி இருவரும் சுற்றுலாவிற்குச் சென்றனர்.
இந்த நிலையில் 42 வயதாகும் அவர்களது மகள் மாலினி தற்போது துபாயில் வசித்து வருகிறார். இவர் குரோம்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்தானத்தின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாலினிக்கு அவரது பெற்றோரின் இறப்புச்சான்றிதழ் தேவைப்பட்டதால் சமூக ஆர்வலர் சந்தானம் மூலம் நடவடிக்கை எடுத்தார்.
அதைத்தொடர்ந்து மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்ததேவ் தாக்ரேவுக்கு சந்தானம் கடிதம் எழுதினார். அதற்கு மும்பை மாநகராட்சிக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது. தங்கள் இடத்தில் இறந்தவர்களின் பட்டியல் இல்லை என்று மும்பை மாநகராட்சி பதில் அனுப்பியது. அதுபோல் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் கைவிரித்தது.
இதையடுத்து மும்பையைச் சேர்ந்த ஜார்ஜ் என்ற தன்னார்வலர் மூலம் மும்பை அந்தேரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிமன்றம், 2022 ஏப்ரல் 29ஆம் தேதி, விமான விபத்தில் இறந்த பார்த்தசாரதி- வசந்தி தம்பதிக்கு இறப்புச் சான்றிதழ் வழங்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து இருவருக்கும் மும்பை மாநகராட்சி நிர்வாகம் இறப்புச்சான்றிதழ் வழங்கியுள்ளது.
இதையும் படிங்க:பாகிஸ்தானில் 107 பேருடன் சென்ற விமானம் கீழே விழுந்து விபத்து