சென்னை - மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு, மில்லினியம் டவுன் குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருபவர், கே.எஸ்.குமார். சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, வீட்டைப் பூட்டிவிட்டு திருச்செந்தூருக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். இன்று(செப்.10) காலை வீட்டை சுத்தம் செய்யும் பெண் வந்து பார்த்தபோது, வீட்டின் கதவில் இருந்த பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து வீட்டின் உரிமையாளருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மதுரவாயல் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மதுரவாயல் காவல் துறையினர் கொள்ளைச் சம்பவம் நடந்த வீட்டை சோதனை செய்தனர்.
கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பார்த்தபோது முகமூடி அணிந்து கொண்டு வீட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து உள்ளே நுழைந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர், வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 40 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பதும், மேலும் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடங்கிய டி.வி.ஆர் பெட்டியையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர்.
இது குறித்து மதுரவாயல் காவல்துறையினர் தனிப்படைகள் அமைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.