தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடந்த 28ஆம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. அதன்படி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி கட்சி தொடர்பான போஸ்டர்கள், பேனர்கள், பெயர்ப் பலகைகள் உள்ளிட்டவற்றை வைத்த கட்சிப் பிரமுகர்கள் மீது தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும், கண்காணிப்புக் குழு அலுவலர்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா, பரிசுப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறதா என்பன குறித்தும் காவல் துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். தேர்தலின்போது எந்த வித அசாம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க சென்னையில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்கவும் காவல் துறையினர் உத்தரவிட்டுள்ளனர். தவிர, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள ரவுடிகளைக் கண்டறிந்து அவர்களை காவல் துறையினர் சிறையில் அடைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 28ஆம் தேதி முதல் இன்று 31ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக 324 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், பணம் மற்றும் விலையுயர்ந்த பொருள்களைக் கொண்டு சென்றதற்காக 383 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் பிரிவின் சென்னை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் உரிமம் பெற்ற 1,799 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், 43 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் 1,954 ரவுடிகளிடம் பிராமணப் பத்திரத்தில் ஆறு மாதம் எந்த விதமான குற்றங்களிலும் ஈடுபடாமல் இருக்க கையெழுத்து பெற்றுள்ளதாகவும் சென்னை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 4 ஆண்டு சிறை ரூ.100 கோடி அபராதத்துடன் தமிழ்நாடு வெற்றிநடைபோடுகிறது - ப. சிதம்பரம்