சென்னை: இயக்குநர் ஷரன் குமார் இயக்கத்தில், நடிகர் பரத் நடித்த 'நடுவன்' திரைப்படம் 12ஆவது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2022-க்கு அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் ஷரன் குமார் கூறுகையில், '12ஆவது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2022-க்கு எங்கள் படம் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தியைக் கேட்டு, எங்கள் படக்குழு மிகவும் மகிழ்ச்சியில் உள்ளது. எங்கள் படத்தினை தேர்வு செய்த ஜூரி மெம்பர்களுக்கு நன்றி.
எங்கள் திரைப்படம் வெளியான போதிலிருந்து நேர்மறையான வரவேற்பைப் பெற்று, உலகம் முழுவதும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது. உலகத் திரைப்பட திருவிழாவான சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா சர்வதேச திரைப்பட விழாவில் நல்ல வரவேற்பு பெற்றது. புதுச்சேரி போன்ற பல்வேறு திரைப்பட விழாக்களில் உலகெங்கிலும் எங்கள் படம் விருதுகளை வென்றுள்ளது.
செப்டம்பர் 2021இல் ஓடிடி நடைமேடையில் (SonyLIV) வெளியான பிறகும், இந்த விழாக்களில் எங்கள் திரைப்படம் அங்கீகாரம் பெறுவது எங்கள் நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு ஒரு சிறந்த உந்துதலாக உள்ளது.
எனது தயாரிப்பாளர் லக்கி சாஜர், நடிகர் பரத், அபர்ணா வினோத், கோகுல் ஆகியோருடன், நான் நினைத்தது போலவே படத்தை வடிவமைக்க, தூணாக இருந்த ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவினருக்கும் இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இத்தகைய மரியாதைகள், நல்ல உள்ளடக்கம் சார்ந்த கதைகளை இயக்கவும், சிறந்த படங்களைத் தொடர்ந்து வழங்கவும் பெரும் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தருகிறது’ என்றார்.
இதையும் படிங்க:ஆஸ்கர் விருது: 1917, ஜோக்கர் மத்தியில் சரித்திரம் படைத்த 'பாராஸைட்'!