'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சிக்காக, பிப்ரவரி 26இல் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திற்கு, திமுக தலைவர் ஸ்டாலின் வருகைபுரிந்திருந்தார்.
கட்சியினரிடையே பேசிய அவர், "திமுக ஆட்சி அமைந்து, நான் முதலமைச்சரானால், 100 நாள்களுக்குள் உங்கள் குறைகள் தீர்க்கப்படாவிட்டால், இந்த ஒப்புகைச் சீட்டு (ஸ்டாலின் கையில் இருப்பதைக் காட்டி) கொண்டு, நீங்கள் தலைமைச் செயலகத்துக்குள்ளே வரலாம்.
அது மட்டுமல்ல முதலமைச்சர் அறைக்குள் வந்து உங்கள் குறைகள் தீர்க்கப்படாதது குறித்து, என்னிடம் நேரடியாகப் புகார் அளிக்கலாம். திமுக ஆட்சியில், 2010இல் ஆரம்பிக்கப்பட்ட செய்யூர் அனல்மின் திட்டத்தை, அதற்கடுத்து வந்த அதிமுக ஆட்சி கிடப்பில் போட்டுவிட்டது. இன்று (பிப். 26) தமிழ்நாட்டின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.
இதையும் படிங்க:பெண்களை கேவலப்படுத்துவது திமுகவின் தொழில் -அமைச்சர் கடம்பூர் ராஜு சாடல்!
ஆனால், இரண்டு நாள்களுக்கு முன்னதாக கோவையில், தமிழ்நாட்டில் சில திட்டங்களை நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மோடி அறிவித்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது. இதுதான் பாஜக, அதிமுகவின் மக்களை ஏமாற்றும் தந்திரம்.
பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதாகவும், அதிமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதை மோடியும் ஆமோதிக்கிறார். ஆனால், சமீபத்தில் தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் பெண் காவல் கண்காணிப்பாளர் ஒருவருக்கே, அவரது உயர் அலுவலரான காவல் துறை சிறப்பு தலைமை இயக்குநர் ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் எழுந்துள்ளது.
காவல் துறையில் பணிபுரியும் உயர் அலுவலரான பெண்ணுக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலைதான் இங்கு நிலவுகிறது" என்று கூறினார்.