செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது கீரப்பாக்கம். இந்த ஊராட்சியில் உள்ள கிராமங்களில், கடந்த 1989ஆம் ஆண்டு, ஆதிதிராவிட மக்களுக்கும், பழங்குடி மக்களுக்கும், 80 தொகுப்பு வீடுகள் இலவசமாகக் கட்டிக் கொடுக்கப்பட்டன. முப்பது ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டிக் கொடுக்கப்பட்ட இந்த வீடுகள், தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளன.
ஏற்கனவே பல வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், இதுகுறித்து அலுவலர்களிடம் அப்பகுதிவாசிகள் முறையிட்டும் எந்தப் பயனும் இல்லை. இந்நிலையில், கீரப்பாக்கம் துலுக்கானத்தம்மன் கோயில் தெருவில், சங்கர் என்பவர் தனது மனைவி, மூன்று பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இன்று(பிப்.14) காலை அவர் உறங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அவரது மனைவி தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது திடீரென அவர்கள் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. அவர்களின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் உள்ளோரும், உறவினர்களும் ஓடி வந்து இடிபாடுகளிலிருந்து அவர்களை மீட்டனர். இந்த விபத்தில் சங்கர் தம்பதியினர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது நிம்மதியை ஏற்படுத்தினாலும், மற்ற வீடுகள் எப்போது இடிந்து விழுமோ என்ற பயத்திலேயே அப்பகுதிவாசிகள் வசித்து வருகின்றனர். எனவே, மாவட்ட ஆட்சியர் உடனடியாக மாற்று ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்றும், புதிதாக தொகுப்பு வீடுகளை கட்டித் தர முன்வரவேண்டும் என்றும் பகுதிவாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இதையும் படிங்க: வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளை : குற்றவாளிகளுக்கு காவல் துறை வலைவீச்சு!