ஆசிரியர் தகுதித் தேர்வு 'முதல் தாள்' எழுதுவதற்கு ஒரு லட்சத்து 83ஆயிரத்து 341 பேரும், 'இரண்டாம் தாள்' எழுதுவதற்கு 4லட்சத்து 20ஆயிரத்து 815 பேரும் என மொத்தம் 6 லட்சத்து 4 ஆயிரத்து 156 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கான தகுதித் தேர்வு ஜூன் 8,9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இத்தகுதித் தேர்விற்கு உரிய நுழைவுச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது. தேர்வர்கள் நுழைவுச்சீட்டினை நகலெடுத்து தேர்வறைக்குக் கொண்டு வரவேண்டும்.
ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளுக்கு 471 மையங்களிலும், இரண்டாம் தாள் 1,081 மையங்களில் 32 மாவட்டங்களில் நடைபெறுகிறது. தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க, பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன. தேர்வின்போது கைப்பேசி உள்ளிட்ட மின்னணு பொருட்களைத் தேர்வறைக்குள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடு நடந்தால், அடுத்துவரும் மூன்று ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அறைக்குள் காலை 8.30 மணிக்குள் தேர்வர்கள் வருகைபுரிய வேண்டும். காலை 10 மணிக்கு மேல் யாரும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வர்கள் தேர்வு முடியும் வரையில் எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். இத்தேர்வுப் பணிகளை பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், வருவாய்த்துறைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்வு அறைக் கண்காணிப்பாளர் பணியில் பள்ளியின் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பள்ளிக்கல்விதுறை இயக்குநரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.