சட்டவிரோத பேனர்களை அகற்ற வேண்டும் என்று டிசம்பர் மாதம் பிறப்பித்த நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத தமிழ்நாடு அரசின் மீது டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், நிர்மல் குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. சட்டவிரோத பேனர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையை அறிக்கையாகத் தாக்கல் செய்ய மாநில அரசு ஒரு வார கால அவகாசம் கோரியது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், அரசு தொடர்ந்து கால அவகாசம் கோருவதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுபோன்று கால அவகாசம் கேட்டால், உள்துறை செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர். சாதாரண மனிதர்கள் தவறு செய்தால் தண்டனை வாங்கி கொடுக்கும் அரசு, அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கால அவகாசம் கோருவது ஏன் எனக் கேள்வி எழுப்பினர்.
சட்ட விரோத பேனர் வழக்கில் அரசின் தொடர் செயல்பாடுகள் நீதிமன்றத்தையே சோர்வடையச் செய்து விட்டதாகவும் கண்டனம் தெரிவித்தனர். அரசின் செயல்பாடுகளால் மனுதாரரிடம் மன்னிப்பு கோரும் நிலையை நீதிமன்றத்திற்குத் தமிழ்நாடு அரசு ஏற்படுத்திவிட்டதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், அரசுக்குக் கால அவகாசம் வழங்க முடியாது எனவும் தெரிவித்தனர்.
மேலும், நாளை அரசு தலைமை வழக்கறிஞர் நேரில் வந்து, சட்டவிரோத பேனர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.