அரியலூர் மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் சிவசங்கர். இவரது வீடு ஆண்டிமடத்தில் உள்ளது. இந்நிலையில் இன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவில் இருந்த தங்க நகை, பணம் உள்ளிட்டவற்றை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை அறிந்த அக்கம்பக்கத்தினர் சிவசங்கருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வீட்டிற்கு வந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த தங்க நகை மற்றும் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்ததது.
![HOUSE _THEFT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/3309770_ari.jpg)
பின்னர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் ஆய்வு செய்தனர். பின்னர் சிவசங்கரிடம் நடத்திய விசாரணையில் 5 கிலோ வெள்ளி, 5 சவரன் தங்க நகை மற்றும் ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்துள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.