வருடந்தோறும் ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடராக ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டிற்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ஆம் தேதிவரை மெல்போர்னில் நடைபெறவுள்ளது.
இத்தொடருக்காக உலகின் நட்சித்திர டென்னிஸ் வீரர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு படையெடுத்துள்ளனர். மேலும் இத்தொடரில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் ஊழியர்கள் கட்டாயம் தனிமைப்படுத்துதலிற்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்க விமானத்தின் மூலம் வந்தவர்களில் ஒரு சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக அந்த விமானத்தில் வந்த விளையாட்டு வீரர்கள் அனைவரும் கட்டாயம் 14 நாள்கள் தங்களை தனிமைப்படுத்த வேண்டுமென ஆஸ்திரேலிய டென்னிஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
மேலும் இந்த தனிமைப்படுத்துதல் காலத்தின்போது வீரர்கள் யாரும் தங்களது பயிற்சிகளுக்கு செல்லக்கூடாது என்றும், வெளியாட்கள் யாரையும் சந்திக்கக்கூடாது என்றும் கட்டளைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து வீரர்கள் பலரும் தங்களது சமூக வலைதளங்கள் வாயிலாக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை புடின்சேவா தனது பதிவில், "விமானத்தில் உள்ள ஒருவருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டால், அந்த விமானத்தில் பயணிக்கும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று யாரும் எங்களிடம் ஏன் சொல்லவில்லை?" என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி!