உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற கூடைப்பந்து விளையாட்டு தொடரான என்பிஏ 2019-20 சீசன் அமெரிக்காவில் இன்று (ஜூலை 30) தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டியில் நியூ ஓர்லியனஸ் பெலிகனஸ் - உதா ஜாஸ் அணியும் மோதுகின்றன. மற்றொரு போட்டியில் லாஸ் ஏஞ்சலிஸ் லேக்கரஸ் - எல்ஏ கிளிப்பர்ஸ் அணி மோதவுள்ளன.
இது தொடர்பாக அமெரிக்க தேசிய கூடைப்பந்து சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் 344 பேருக்கும் கரோனா வைரஸ் பரிசோதனை, என்பிஏ வளாகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பரிசோதனையின் முடிவுகள் ஜூலை 20ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், எந்தவொரு வீரருக்கும் வைரஸ் தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டுக்கான என்பிஏ தொடரை நடத்துவதற்கு விரிவான திட்டம் இறுதி செய்யப்பட்ட நிலையில், வீரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு கடுமையான நெறிமுறைகள் பின்பற்றப்படவுள்ளன. ஜூலை 30ஆம் தேதி முதல், 2019-20 சீசனுக்கான போட்டிகள் நடைபெறுகின்றன. இத்தொடரில் 22 அணிகள் பங்கேற்பதுடன், ரசிகர்கள் போட்டிகளை நேரில் கண்டுகளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. அக்டோபர் 13ஆம் தேதிக்குள் தொடரின் இறுதிப் போட்டி நடத்தப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த ஆண்டுக்கான தொடரை நடத்துவது குறித்து என்பிஏ மற்றும் தேசிய கூடைப்பந்து வீரர்களின் சங்கம் இணைந்து விரிவான திட்டத்தை இறுதி செய்திருப்பதாக ஜூன் மாதம் 26ஆம் தேதியே அறிவித்தது. இதைத்தொடர்ந்து தற்போது என்பிஏ இந்த ஆண்டுக்கான தொடர் கடுமையான பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் களமிறங்கும் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன்!