நடந்து முடிந்த டோக்கியோ 2020 ஒலிம்பிக் தொடரில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, தடகளப் பிரிவின் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றிருந்தார். அந்த தங்கம் பல பெருமைகளையும், சாதனைகளையும் இந்தியாவிற்கு கொண்டு வந்தது.
23 வயதான நீரஜ் சோப்ரா, இந்தியாவுக்கு தடகளத்தில் முதல் பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளார். அவர் தங்கம் வென்ற தருணத்தை, டோக்கியோ ஒலிம்பிக் தடகளத்தின் சிறந்த 10 தருணங்களுள் ஒன்றாக உலக தடகள அமைப்பு அறிவித்துள்ளது. நீரஜ் சோப்ரா, தங்கம் வென்ற தினமான ஆகஸ்ட் 7ஆம் தேதியை தேசிய ஈட்டி எறிதல் தினமாக இந்திய தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இன்ஸ்டாவில் கலக்கும் நீரஜ்
மேலும், ஒலிம்பிக்கிற்கு முன்னர் இன்ஸ்டாகிராமில் நீரஜை ஒரு லட்சத்து 43 ஆயிரம் பின்தொடர்ந்த வந்த நிலையில், தற்போது 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் அதிகமானோர் பின் தொடரும் தடகள வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார்.
வாழ்க்கை படமாகிறது
ஹரியானா மாநிலத்தின் பானிபட் நகரத்தில் விவசாயி மகனாக வளர்ந்தது முதல், டோக்கியோவில் இந்தியாவின் தங்க மகனானது வரையிலான சாதனையை கன்னட திரைப்பட இயக்குநர் ஒருவர் திரைப்படமாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கர்நாடக கடலோர பகுதி மக்களின் வாழ்வியல் குறித்த 'பிர்தத கம்புல' எனும் திரைப்படத்தை இயக்கிய அருண்ரெய் தோடார், நீரஜ் சோப்ரா வாழ்க்கையை திரைப்படமாக்க இருக்கிறார்.
இதையும் படிங்க: வீரருக்கு தங்கம் வாங்க உதவிய பெண் - கவுரவித்த ஜமைக்கா அரசு