கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், ஐந்து பேர் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் அரசு மருத்துவர்களைக் கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனைகளை நடத்திவந்த தேசிய ஊக்கமருந்து தடுப்பாணையம் (நாடா), தற்போது ஊக்கமருந்து சோதனையை ஒத்திவைக்கவுள்ளதாகத் தகவலளித்துள்ளது.
இது குறித்து பேசிய நாடா அமைப்பின் முதன்மை நிர்வாக மேலாளர் நவின் அகர்வால் கூறுகையில், தற்சமயம் அரசு மருத்துவர்கள் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகப் பொதுமக்களுக்கு மருத்துவம் அளித்துவருவதால், நாடா தனது ஊக்கமருந்து பரிசோதனைகளைத் தற்காலிகமாக ஒத்திவைக்க திட்டமிட்டுள்ளது. அதேசமயம் மிகவும் முக்கியமான ஊக்கமருந்து சோதனைகளுக்கு மட்டும் மருத்துவர்களை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் ஊக்கமருந்து சோதனைகளை மட்டும் தற்போது பரிசோதிக்கவுள்ளதாகவும், மீதமுள்ள வீரர்களின் பரிசோதனைகள் எதுவும் பரிசோதிக்கபட மாட்டாது என்றும், கோவிட்-19 பெருந்தொற்று சூழ்நிலை நிறைவடைந்த பிறகே மற்ற வீரர்களுக்கான சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னதாக உலக ஊக்க மருந்து தடுப்பாணையம் (வாடா), உலக ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்புக்கு (ஏடிஓ) புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல் பட்டியலை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கோவிட்-19 எதிரொலி: புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதலை வெளியிட்ட வாடா!